அன்பையும், பாச உணர்வையும், உதவும் மனத்தையும் – எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயத்தையும்
அடிப்படையாக கொண்டு தூய தமிழ் இனத்தவராம், மன்னர் பின்னோராம், மூவேந்தருக்குப்பின்
சைவத்தையும், தமிழையும் காத்தும் வளர்த்தும் வரும் இனத்தவராம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்
சமூக இன முன்னேற்றதிற்காக, அவர்களில் நலிந்த பிரிவினர்களுக்கு உதவி கை தூக்கிவிட்டு,
நகரத்தார்களின் உயர்ந்த பண்பாட்டையும், பழக்க வழக்கங்களை நிலை நிறுத்துவதற்காக, அரேபிய
பாலைவனங்களுக்கிடையே சோலைவனமாய் விளங்கும் ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் நகரத்தார்களால்
நகரத்தார்களுக்காக நகரத்தார்களினால் இயங்கி வரும் உன்னத அமைப்பே "ஐக்கிய அரபு நாடுகள்
நகரத்தார் கூட்டமைப்பு" ஆகும்.
இவ்வமைப்பு சார்ஜா நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. “கதிர் வெடித்துப்பிழம்பு
விழ, ஆங்கே கடல் குதித்துச் சூடாற்ற முதுமைமிகு நிலப்பரப்பின் முதற்பரப்பு தோன்றிவிட
நதிவருமுன் மணல் தருமுன் நலம் வளர்த்த தமிழக்குடியின் பல சமூகங்களில் பண்டைய மரபுகளையும்
பண்பாட்டையும் இன்றளவும் கட்டிக் காத்து வருபவர்கள் நகரத்தர்களே” என்றால் அது மிகையாகாது. நம்
முனோர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி நகரத்தார் இன முன்னேற்றத்திற்கென
- நகரத்தார் சமூகத்தில் நலிந்த வசதி குறைந்தவர்களின் பெண்கள் திருமணம், கல்விச்செலவு,
மருத்துவம், சைவத்திருப்பணி, தமிழ் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உதவுமுகமாகப் பல்வேறு நிதி
ஆதாரங்களைச் செயற்படுத்தி அவர்களுக்கு இயன்றளவு உதவுவது
- ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் நகரத்தார் குடும்பங்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து
அவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும்
வழிவகைகளை உண்டாக்கிக் கொடுப்பது.
- குழந்தைகளை ஒன்றிணைத்து, நம் உயர்பண்புகளையும், பண்பாட்டின் மாண்பினையும் அவர்களுக்குச்
சொல்லிக்கொடுத்து மனதில் பதிய வைப்பது, அதற்கான சமூக நிகழ்வுகளை முன்னின்று நடத்துவது.
- சைவம் மற்றும் தாய்மொழியான தமிழின்பால் நம்மவர்களிடமும் நம் இனக்குழந்தைகளிடமும் பற்று
ஓங்கச் செய்ய முயல்வது.
ஆகியவை இக்கூட்டமைப்பின் தலையாய நோக்கங்களாகும்.
1991 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஒரு நாள், அந்தி மயங்கும் பொழுதில் துபாய் மாநகரின்
ஒரு பகுதியான தேரா துபாயில் ஒரு சிற்றுண்டி உணவகத்தில் சொக்கநாதபுரம் திரு.சேது வள்ளியப்பன்,
காரைக்குடி திரு இராம.நாகப்பன், கல்லுப்பட்டி திரு.கணேஷ் ஆகிய மூவரும் சந்தித்துப்
பேசும் பொழுது அவர்தம் எண்ணத்தில் ஏன் இங்கும் நாம் ஒரு அமைப்பை தோற்றுவித்து நகரத்தார்களை
ஒருங்கிணைப்பதோடு, இன நல மேம்பாட்டிற்குப் பாடுபடக்கூடாது என்கின்ற கருத்து உருவானது.அதனை
அன்று மூத்தவர்களான 1974ம் ஆண்டு முதல் துபாயில் பணிபுரிந்து வந்த கீழச்சீவல்பட்டி
திரு.தே.முருகப்பன் அவர்களிடம் கூற, அவர்கள் ”மகிழ்வுடன் நிச்சயம் செயல்படுத்துவோம்”
என்று கூற இணைந்தன நால்வரின் கரங்களும் .எழு ஞாயிறாய் எழுந்தது நகரத்தாரின் இக்கூட்டமைப்பு.
- கூட்டமைப்பு தோற்றுவித்த திருவாளர்கள்


திரு. சேது வள்ளியப்பன் (சொக்கநாதபுரம்), திரு.இராம. நாகப்பன் (காரைக்குடி), திரு.பழ. கணேஷ் (கல்லுப்பட்டி)
ஆகிய மூவரின் கருவிலே உருவானது இக்கூட்டமைப்பு.மூவரின் கருவை மகிழ்வுடன் வரவேற்று உருவம்
தரத் தலைமை ஏற்றுச் செயல்பட்ட நான்காமவர் திரு.தே. முருகப்பன் (கீழச்சீவல்பட்டி) ஆவார்.
24.05.1991 அன்று இக்கூட்டமைப்பின் முதல் கூட்டம்(இது கலந்துரையாடல் என அழைக்கப்படுகின்றது)
கல்லுப்பட்டி திரு.பழ.கணேஷ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.தோற்றுவித்த திருவாளர்கள்
சேது.வள்ளியப்பன், இராம.நாகப்பன், தே.முருகப்பன் அவர்களுடன் மேலும் ஆறு உறுப்பினர்களான
சொக்கநாதபுரம் சேது.இராமநாதன், கல்லல் சோம.சண்முகம், நாட்டரசன்கோட்டை இராம.சுரேஷ்,
பூலாங்குறிச்சி வ.சுந்தரம், பட்டமங்கலம் இராசேந்திரன், காளையார்மங்கலம் மு.சுப்பிரமணியன்
ஆகியோர் கலந்துக் கொள்ள மொத்தம் பத்து உறுப்பினர்களுடன் (இல்லம் தந்து ஏற்பாடு செய்த
நிறுவன உறுப்பினர் திரு.பழ.கணேஷ் தவிர்க்க இயலாத காரணங்களால் தாயகம் சென்று இருந்தார்)
தொடங்கப்பட்டது.
இம்முதல் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் நோக்கமும் குறிக்கோளும் தெளிவாக்கப் பட்டதுடன்,
45 நாட்களுக்கு ஒரு முறை ஒரு உறுப்பினர் வீட்டில் கூடி மகிழ்வதுடன், எண்ணங்களைச் செயல்படுத்த
வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப் பெற்றது.முதல் ஐந்து ஆண்டுகள் உறுப்பினர்களின்
வீடுகளில் இக்கலந்துரையாடல் நடைபெற்றதும், அந்நாட்களில் எல்லாம் அனைவரும் கல்யாண வீடு
போல் ஒன்று கூடி அணுசரணையாய் அன்போடும், பாசத்தோடும் கலந்து கொண்டதும் மறக்க இயலா ஒன்றாகும்.பின்னால்
உறுப்பினர்களும் குடும்பங்களும் அதிகம் ஆக ஆக வீடுகளில் நடக்க இயலாதென்பதால் 1991 ஆம்
ஆண்டு முதல் உணவகங்களில் கலந்துரையாடல்கள் நடைபெறும் முறை தொடங்கப் பெற்றது.இதற்கான
செலவை இரு உறுப்பினர்கள் இணைந்து ஏற்றுக் கொண்டனர்.இவ்வாறு பத்து உறுப்பினர்களுடன்
தொடங்கி நடந்து வந்த கலந்துரையாடல்களும்,செயல்பாடுகளும் சிறுகச் சிறுக வளர்ந்து இன்று
பெரிய அளவில் நூறாவது கலந்துரையாடலைக் கடந்து வீறுநடை போடுவது,நினைத்தால் இனிக்கும்
– நெஞ்சத்தைக் குளிர வைக்கும் சிறப்பான செய்தியாகும்.
”அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” எனும் பொய்யாமொழிப் புலவரின்
மொழிக்கேற்ப மிக அமைதியாய் ஆரவாரம் இல்லாமல் நிதி ஆதாரம் ஏதுமின்றித் தொடங்கிய இந்த
அமைப்பு முளைத்துத் துளிர்த்துக் கிளைத்துச் செடியாகி, மரமாகிக் கிளைகளுடன் பூத்துக்
காய்த்துக் குலுங்கும் நிலைக் கண்டு தாயகத்திலிருக்கும் நகரத்தார் சமூகம் பூரித்து
உவக்கின்றது.”ஆச்சி வந்தாச்சு” இதழின் சார்பில் இந்த “ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார்
கூட்டமைப்பு” மென்மேலும் உரம்பெற்று உயர்சின்னமாக விளங்கவும்,சமூக இன முன்னேற்றத்திற்கு
உதவவும் வேண்டி ஆலவாய் அண்ணல், அங்கயற்கண்ணி அடிபோற்றி வாழ்த்துகின்றோம்.