Our Community - Nagarathar Kootamaipu [INK]
Promoting Saivam and Tamil
முன்னோர்களின் வழிநடத்து மரபு வழக்கப்படி சைவத்தையும் தமிழையும் பேணும் முகமாக இன்றுவரை
பல்வேறு சிவன் மற்றும் முருகக் கடவுளர்களின் கோவில்கள், புனரமைப்பிற்கென கூட்டமைப்பின்
சார்பில் ஏறத்தாழ சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு கலந்துரையாடலின் தொடக்கத்திலும் நம் குழந்தைகளிடையே, குறைந்துவரும்
தமிழார்வம், தமிழறிவு மற்றும் தாய்மொழிப்பற்றை வளர்க்க வேண்டி, உலகப் பொதுமறையாம் திருக்குறளில்
ஒரு குறளோடு அதற்கான பொருள் விளக்கத்தையும் சொல்ல வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
நம் முன்னோர்களின் சைவத்தொண்டுகளை நம்மிடையே வளர்க்கும் வண்ணம், ஆன்மீகம் பற்றியும்,
சைவம் பற்றியும், நம்மின நாயன்மார்கள் பற்றியும் அனைவரும் அறியும் வகையில் சிறப்பு
சொற்பொழிவுகள் வாயிலாக எளிய தமிழில் விளக்கி கூறுவது கூட்டமைப்பு ஆற்றி வரும் சீரிய
பணிகளில் ஒன்று.
இவை மட்டுமல்லாது அவ்வப்பொழுது தமிழ் இலக்கிய நகைச்சுவை பட்டிமன்றம், சொற்பொழிவுகள்,
கலந்துரையாடல்கள் ஆகியவையும், தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் நடத்தப்படுகின்றன.
குழந்தைகளுக்கு ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் மற்றும் நீதிக்கதைகளை நகல் எடுத்துக் கொடுத்தும்
அவற்றில் போட்டிகள் வைத்தும் அவர்தம் ஆர்வத்தை வளர்க்க கூட்டமைப்பு பாடுபடுகின்றது.
தேவாரம், திருவாசகம் பாடல்களை படிக்க ஊக்குவிக்கின்றோம்.
ஆண்டிற்கு இரண்டு முறை நகரத்தார் தம் கடவுளாம், முருகப் பெருமானின் அருள் வேண்டி, தமிழ்
வழிபாடுகளும், பூசைகளும், அன்னதானமும் மிகச் சிறப்பாக செய்வதுடன், துபாய் நகரில் உள்ள
கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழாப் பூசை மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பெறுகின்றன.அனைவருக்கும்
அன்னதானமும் நகரத்தார் மண்டகப்படியாக நடைபெற்று வருகின்றது.
நம் நகரத்தாரின் நலிவுற்ற சிலரின் மருத்துவ சிகிச்சைக்கென சிறப்பு நிதி உதவியாக இதுவரை
ஏறத்தாழ ரூ.1,75,000/- (ரூபாய்.ஒரு லட்சத்தி எழுபத்து ஐந்தாயிரம்) வழங்கப்பட்டுள்ளது.
நகரத்தார் இளைஞர் ஒருவரின் செட்டிநாட்டு நிலைக்கதவுகளில் உள்ள சித்திர வேலைப்பாடுள்ள
சூரியப்பலகை குறித்த ஆராய்ச்சிக்கு நிதி உதவி வழங்கப்பெற்றது.
குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் முகமாக சதுரங்க விளையாட்டு வீரச் சிறுவர்
மாஸ்டர்.பிரியதர்ஷனுக்கு நிதி உதவி செய்து கௌரவிக்கப் பெற்றது.
நகர விடுதிகளை புனரமைக்கவும், புதிய விடுதிகள் கட்டவும் நிதி உதவி செய்யப்பட்டு வருகின்றது.
நாட்டுப்பற்றில் நகரத்தார்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்
கார்கில் போரில் மறைந்த மாவீரர்களின் குடும்பத்திற்கென கணிசமான தொகையும், ஆழிப்பேரலையால்
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கணிசமான தொகையும் கூட்டமைப்பால் வழங்கப்பெற்றது.
“கற்பகத் தெய்வத்தின் பொற்பதம் பணிந்து” நகரத்தார் இன மக்கள் எங்கிருப்பினும் ஒன்று
கூடி இழை எடுத்துக்கொள்ளும் நம் தனிப்பெரும் நோன்பாம் பிள்ளையார் நோன்பினை அகமிக மகிழ்ந்து,
சீரோடும், சிறப்போடும் எல்லோரும் ஒன்றாக இணைந்து 1993 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகின்றோம்.1993
முதல் 2002 வரை கீழச்சிவல்பட்டி தே.முருகப்பண்ணன் அவர்கள் இல்லத்திலும் 2004,2005 ஆண்டுகளில்
சொக்கநாதபுரம் திரு.சேதுவள்ளியப்பன் அவர்கள் இல்லத்திலும், 2006 ஆம் ஆண்டு முதல் அரியக்குடி
நா.இலட்சுமணன் அவர்கள் இல்லத்திலும் இவ்விழா சிறப்புற நடைபெற்று வருகின்றது.
1999 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிதி உதவிகளையும் அதிகரிப்பதற்காக நிதி ஆதாரங்களை கூட்ட வேண்டி,
பிள்ளையார் நோன்பில் தெய்வத்திற்குப் படைத்த மங்கல பொருட்களை ஏலம் விடும் திட்டம் கூட்டமைப்பின்
அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
மங்கலப் பொருட்களின் ஏலத்தொகை ஒவ்வொரு ஆண்டும் மென்மேலும் அதிகரித்து வருவது, இந்த ஏலங்களின்
புனிதத்தையும், இவ்வேலம் எடுப்பதால் தங்கள் வாழ்வும் வளமும் மென்மேலும் பெருகி வளர்கிறது
என்கிற உறுப்பினர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் புலப்படுத்துவதாக அமைகின்றது.
பிள்ளையார் நோன்பில் செய்யப்படும் அலங்கார ஆராதனைகளும், கல் மனதையும் கரைய வைக்கும்
தமிழ் பூசையும், வாக்கு பலிதத்துடன் விடப்படும் மங்கலப் பொருட்களின் ஏலமும், அதை எடுக்கும்
உறுப்பினர்கள் முகத்தில் தோன்றும் பூரிப்பும், ஆச்சிமார்களின் கைவண்ணத்தில் உருவாகும்
அறுசுவைப் பலகாரங்களும் , அவற்றை வாழை இலை போட்டுப் பரிமாறும் பாங்கும், கடும் பாலை
வானத்தில் காணக்கிடைக்காத வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலமும் செய்திகளை தொகுத்தளித்தோர்
இக்கூட்டமைப்பிற்கே உரிய தனிப்பெருஞ் சிறப்புகளாகும்.